×

செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில் இனிமேல் அவகாசம் கேட்கக் கூடாது: அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை


புதுடெல்லி: செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கு விவகாரத்தில் இனிமேல் காலஅவகாசம் கேட்க கூடாது என்று அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதையடுத்து அவர் தற்போது சிறையில் உள்ளார். இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், செந்தில் பாலாஜி பல மாதங்களாக சிறையில் இருந்து வருவதால் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபாய் எஸ் ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, இந்த வழக்கின் விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று நீதிபதிகள் முன்னிலையில் கோரிக்கை வைத்தார். இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம் சங்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதில்,‘‘இந்த வழக்கில் எங்களுக்கு சாதகமான உத்தரவுகள் வரும் என்பதை கருத்தில் கொண்டு அமலாக்கத்துறை வேண்டும் என்றே இப்போது கால அவகாசம் கேட்கிறார்கள். குறிப்பாக கடந்த முறைக்கூட விசாரணை நடைபெறவிருந்த நாளுக்கு முந்தைய நாள் இரவு பதில் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

செந்தில் பாலாஜி வழக்கு விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்து சட்ட விதிகளை மீறி செயல்படுகிறது. இதற்காக முந்தைய விசாரணையின் போது நீதிமன்றத்தில் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டு இருந்தனர் என தெரிவித்தார். இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,‘‘வழக்கு விசாரணைக்காக இன்று(நேற்று) பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், அதனை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்பதா?. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தரப்பில் அவகாசம் கேட்பது என்பது சரியான ஒன்று கிடையாது. இதுவே இறுதியாக இருக்கட்டும். இருப்பினும் வழக்கை வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம். அன்றைய தினம் இந்த விவகாரத்தில் கண்டிப்பாக விசாரணை நடத்தப்படும். அப்போது வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று யாரும் கேட்க கூடாது. அப்படி கோரிக்கை வைத்தாலும் நாங்கள் அதற்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்து உத்தரவிட்டனர்.

The post செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில் இனிமேல் அவகாசம் கேட்கக் கூடாது: அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Supreme Court ,New Delhi ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு?